சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விதி ஆய், விளைவு ஆய்,
பண் - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=rm_NWR-QZ3o
1.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண் தரங்கப் புனல் கமல
பண் - பழந்தக்கராகம்   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2yPMSDXb4nE
1.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=bne7fi0psYs
2.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=KpObSyXQ5g8
2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=k7fxm4B3rIM
2.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
பண் - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=2F8zKGSlqLY
2.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடை அது ஏறி, வெறி
பண் - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இயல் இசை எனும் பொருளின்
பண் - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0dcNVUU6Z8M
3.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=jAygpVU6KT8
3.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சங்கு அமரும் முன்கை மட
பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5QY8RVXSyI8
3.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,
பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CmlGlatKBQ4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.030   விதி ஆய், விளைவு ஆய்,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

[1]
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

[2]
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

[3]
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

[4]
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.

[5]
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

[6]
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;
அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;
பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.

[7]
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

[8]
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

[9]
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

[10]
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.060   வண் தரங்கப் புனல் கமல  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு தோணியப்பர் திருவடிகள் போற்றி )
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

[1]
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!

[2]
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்
கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!

[3]
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

[4]
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!
தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!

[5]
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!

[6]
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!

[7]
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!

[8]
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!

[9]
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்
முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்
பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!

[10]
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.104   ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

[1]
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,
சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.

[2]
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.

[3]
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்
புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

[4]
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்-
ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்
பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.

[5]
மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம்
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும்
புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.

[6]
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்
அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

[7]
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.

[8]
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம்
மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த
போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.

[9]
வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்!
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.

[10]
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.025   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!

[1]
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப்
புண்ணியன், உறையும் புகலியை
நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே!

[2]
வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்,
பூசும் நீற்றினன், பூம் புகலியைப்
பேசுமின், பெரிது இன்பம் ஆகவே!

[3]
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,
பொடி கொள் மேனியன், பூம் புகலியுள
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!

[4]
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.

[5]
மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே.

[6]
கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான்,
இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை,
பொரு விடை உயர்த்தான், புகலியைப்
பரவிட, பயில் பாவம் பாறுமே.

[7]
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!

[8]
மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே?

[9]
நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல்
ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியைச்
சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.

[10]
புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.029   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

[1]
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.

[2]
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே.

[3]
மை தவழும் மா மிடறன், மாநடம் அது ஆடி,
கை வளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,
தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.

[4]
முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே.

[5]
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச,
தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.

[6]
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.

[7]
பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர்
நெருக்குஉறு கடல் திரைகள் முத்தம்மணி சிந்த,
செருக்குஉறு பொழில் பொலி திருப் புகலிஆமே.

[8]
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.

[9]
கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.

[10]
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.054   உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.



[1]
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்!
ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்!
போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[2]
அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல் அடைவு எய்த,
மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்!
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி,
எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

[3]
கயில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! கடிய கரியின்தோல்,
மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்!
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதி ஆய் விளங்கும் பைம்புகலி,
எயில் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக இசைந்தீரே.

[4]
நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்!
பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி,
தே ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

[5]
மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்!
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி,
கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

[6]
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரியக் கணை தொட்டீர்!
அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த, அருள் செய்தீர்!
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி,
ஒளி புல்கு கோயிலே கோயில் ஆக உகந்தீரே.

[7]
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர் கோனை வரைக்கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார்
புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி,
வரம் தோன்று கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[8]
சலம் தாங்கு தாமரை மேல் அயனும், தரணி அளந்தானும்,
கலந்து ஓங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்!
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி,
நலம் தாங்கு கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

[9]
நெடிது ஆய வன் சமணும், நிறைவு ஒன்று இல்லாச் சாக்கியரும்,
கடிது ஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள் ஆனீர்!
பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து
ஏத்த,
வடிவு ஆரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[10]
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.122   விடை அது ஏறி, வெறி  
பண் - செவ்வழி   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

[1]
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்,
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச்
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே.

[2]
வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார், மதித்
துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி,
புண்டரீகம்மலர்ப் பொய்கை நிலாவும் புகலியே.

[3]
திரியும் மூன்று புரமும்(ம்) எரித்து, திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான், அரவக் குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால், வெயில்
புரிவு இலாத தடம் பூம்பொழில் சூழ் தண் புகலியே.

[4]
ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன் அருள் செய்தவர்,
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே.

[5]
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும்(ம்) இடம் ஆவது
கொக்கு, வாழை, பலவின் கொழுந் தண் கனி, கொன்றைகள்,
புக்க வாசப்புன்னை, பொன்திரள் காட்டும் புகலியே.

[6]
தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத் தொலைவித்து, அவன்
தலையும் தோளும் நெரித்து சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்பு இலார்,
பொலியும் அம் தண்பொழில் சூழ்ந்து அழகு ஆரும்
புகலியே.

[8]
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னம் ஆய்க்
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது
நீண்ட நாரை இரை ஆரல் வார, நிறை செறுவினில்
பூண்டு மிக்க(வ்) வயல் காட்டும் அம் தண் புகலியே.

[9]
தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு, சாக்கியர்,
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வான் உளோர்,
அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே.

[10]
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.003   இயல் இசை எனும் பொருளின்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.

[1]
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.

[2]
பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!

[3]
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே!
முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!

[4]
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,
அருமையில் அளப்பு அரிது ஆயவனே!
அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
பொலிந்தவனே!

[5]
அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,
புடை பட அரைமிசைப் புனைந்தவனே!
படை உடை நெடுமதில் பரிசு அழித்த,
விடை உடைக் கொடி மல்கு, வேதியனே!
விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித்
தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.

[6]
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,
செடிய வல்வினை பல தீர்ப்பவனே!
துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப்
பொடி அணி மார்பு உறப் புல்கினனே!
புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர்
நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.

[7]
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;
குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த
அர விரிசடை முடி ஆண்டகையே!
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.

[8]
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!

[9]
கையினில் உண்பவர், கணிகநோன்பர்,
செய்வன தவம் அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே!
வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!

[10]
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.007   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!

[1]
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும்
பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர்,
காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!

[2]
கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக் கடைக்கண்டானும்,
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!

[3]
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.

[4]
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்,
நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர்,
கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!

[5]
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!

[6]
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!

[7]
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே!

[8]
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!

[9]
பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது ஓர்,
தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்-
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர்,
வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த மணவாளனே.

[10]
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.081   சங்கு அமரும் முன்கை மட  
பண் - சாதாரி   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு தோணியப்பர் திருவடிகள் போற்றி )
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.

[1]
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது, இயம்ப,
கல் அரிய மாமலையர் பாவை ஒருபாகம் நிலைசெய்து,
அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம் ஆமே.

[2]
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.

[3]
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலை
ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய்
தோணிபுரம் ஆமே.

[4]
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்;
நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.

[5]
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில்
பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.

[6]
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில்
பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர்
துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.

[7]
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலை
துன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே.
[8]
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,
ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்
தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.

[9]
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக்
காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்-
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.

[10]
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை,
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம்
வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.100   கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,  
பண் - சாதாரி   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு தோணியப்பர் திருவடிகள் போற்றி )
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்;
பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.

[1]
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க்
கோமளமாது உமையாள
பங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து,
சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல்
கொண்டார் தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம்
தானே.

[2]
மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது உமை பேது உறலும்,
சித்தம் தெளிய நின்று ஆடி, ஏறு ஊர் தீவண்ணர்,
சில்பலிக்கு என்று,
ஒத்தபடி வந்து, என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம்போலும்
துத்தம் நல் இன் இசை வண்டு பாடும் தோணிபுரம் தானே.

[3]
வள்ளல் இருந்த மலை அதனை வலம் செய்தல் வாய்மை என
உள்ளம் கொள்ளாது, கொதித்து எழுந்து, அன்று, எடுத்தோன் உரம் நெரிய,
மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும் இடம்போலும்
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம் தானே.

[8]
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரை மலர் மேல் அயனும்,
பல் பறவைப்படி ஆய் உயர்ந்தும், பன்றி அது ஆய்ப் பணிந்தும்,
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர்
இடம்போலும்
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம்
தானே.

[9]
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்,
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய் மடிய,
இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே.

[10]
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை,
மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்-
வாய்மையினால்
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list